Monday, November 15, 2010

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? -

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? - 15-11-2010
தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
விரும்பிய பணியை நல்ல ஊதியத்தில் பெற நடக்கும் போராட்டத்தில், ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் (Resume) முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் தனது தகுதி, திறமை, அனுபவம், சாதனை போன்றவற்றை அந்த சுயவிவர விண்ணப்பத்தின் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் எந்தளவு ஒரு நிறுவன அதிகாரியை கவர்கிறதோ, அதைவைத்தே அவரின் வேலைவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது எனலாம்.

சிறப்பான வகையில் சுயவிவர விண்ணப்பம் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

எளிமை:சுயவிவர விண்ணப்ப வடிவமைப்பில் கடினமான மற்றும் சிக்கலான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டாம். படிப்பவரை குழப்பும் வகையில் அதிக தகவல்களை சேர்க்க வேண்டாம். உங்களின் சுயவிவர விண்ணப்பம் குறைந்த நேரத்திலேயே படிக்கப்படும் அளவிற்கு விஷயங்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய தகுதிகள் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நேர்த்தி:உங்கள் சுயவிவர விண்ணப்பம் ஆர்வமூட்டுவதாகவும், உங்கள் பணி சாதனைகளை சுருக்கமாக மற்றும் அழகாக சொல்வதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலம் நிறுவன அதிகாரிகள் உங்கள் திறனை எளிதாக தெரிந்துகொண்டு, உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்கள். மேலும் நீங்கள் சாதித்த சில அரிதான மற்றும் வித்தியாசமான விஷயங்களை சுருக்கமாக குறிப்பிட்டால் உங்கள் பணி வாய்ப்பை அது மிகவும் அதிகரிக்கும்.

பணி இடைவெளி:நீங்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பணியில் இல்லாமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட தயங்க வேண்டாம். ஏனெனில் இன்றைய பொருளாதார சூழலில் அந்த விஷயத்தை ஒரு நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் வேறு ஏதாவது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, உங்கள் சுய திறன்களை வளர்ப்பதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிடவும்.

வகைப்படுத்தல்:இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை இணையத்தில் செலுத்தி, அதன்மூலம் ஏராளமான நிறுவனங்களை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தமுறையில் சுயவிவர விண்ணப்பம் ஒரே வடிவமைப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். நாம் எந்த மாதிரியான பணிக்காக விண்ணப்பிக்கிறோமோ, அதற்கேற்ற விதத்தில் சுயவிவர விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விதியை தெரிந்திருத்தல்:நீங்கள் சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு நாட்டிலும் சுயவிவர விண்ணப்ப சமர்ப்பிப்பில் எந்தமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை முன்பே தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் சில நாடுகளில் சுயவிவர விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் சில நாடுகளில் அந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே போட்டி நிறைந்த இன்றைய வர்த்தக உலகில் உங்கள் சுயவிவர விண்ணப்பம், தேவையான இடத்தில், தேவைப்படும் விதத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றினால் வேலைக்கான போட்டியில் நீங்கள் முந்தி செல்வதை உறுதி செய்யலாம்.

No comments:

Post a Comment