Monday, August 24, 2015

அண்ணா நூலகத்தை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்



சென்னை: 'சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை முறையாக பராமரித்து தரம் உயர்த்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டி.பி.ஐ., வளாகம்:
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோட்டூர்புரத்தில், 179 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாறியதும், அந்த நுாலகத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்திற்கு மாற்ற, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோன்மணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நுாலகத்தை மாற்ற தடை விதித்தது.'நுாலகத்தை முறையாக பராமரிப்பதில்லை; அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை; புத்தகங்கள் வாங்குவது குறைந்துள்ளது; நுாலகத்தை படிப்படியாக மூடுவதற்கு, அரசு முயற்சிக்கிறது' என, மீண்டும் ஒரு மனுவை, மனோன்மணி தாக்கல் செய்தார். 

அதேபோல், மூத்த வழக்கறிஞர் காந்தியும் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில், 'நுாலகத்தை முறையாக பராமரிக்கிறோம்; அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, நுாலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர்கள் சுந்தர், ஆஷா ஆகியோரை, அட்வகேட் கமிஷனர்களாக நியமித்தது. இந்த குழு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு சென்று பார்வையிட்டு, 160 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகினர். 

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பிரச்னை இல்லை:




அட்வகேட் கமிஷனர்கள் அளித்த அறிக்கை மற்றும் புகைப்படங்களை, நாங்கள் பரிசீலித்தோம். விரிவான அறிக்கை தாக்கல் செய்த, கமிஷனர்களின் பணியை பாராட்டுகிறோம்.நாங்கள் முதலில் நினைத்த அளவுக்கு, பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஒழுங்கான பராமரிப்பு இல்லாதது, தரம் உயர்த்தாதது என, குறைபாடுகள் உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதில், அரசுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.இந்த அளவுக்கு, ஒரு நுாலகத்தை உருவாக்கும் போது, அதை ஏற்படுத்தியதோடு, அரசின் கடமை முடிந்து விடவில்லை. அதை முறையாக பராமரிப்பதுடன், தரம் உயர்த்தவும் செய்ய வேண்டும்.மாநில அரசுக்கு, நிதி ஒரு பிரச்னை இல்லை. நுாலகத்தில் இருந்தே, தன்னிறைவு பெறும் அளவுக்கு, வருவாய் திரட்டுவதற்கான வழிமுறைகளை, கமிஷனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நுாலகத்தில் உள்ள அரங்கம், மாநாட்டு அரங்கங்கள், கருத்தரங்கு அறைகளை வாடகைக்கு விடுவதன் மூலம், வருவாய் திரட்டி கொள்ளலாம். இந்த அரங்குகள், அறைகளை பூட்டி வைத்துள்ளனர். அதனாலேயே, வசதி குறைவாக தெரிகிறது. அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகள் அனைத்தையும், குறிப்பிட்ட கால நேர அடிப்படையில், அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.

அறிக்கை தாக்கல்:




தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு, கால அட்டவணையை, அரசு தயாரித்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் அவ்வப்போது, பணிகளை பூர்த்தி செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.முதலில், ஒவ்வொரு பணியையும் முடிப்பதற்கான கால அவகாசம் குறித்த அட்டவணையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் திரட்டுவதற்காக, ஏற்கனவே உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நுாலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணி விதிகளை அமல்படுத்த வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான், நுாலகத்தில் உள்ள குறிப்பிட்ட வசதிகள் முழுமையாக இயங்கும் வகையில் இருக்கும்.எனவே, அதிகாரிகள் தேவையான விஷயங்களை, விரைந்து செயல்படுத்துவார்கள் என, நாங்கள் நம்புகிறோம். நுாலகம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்; தரம் உயர்த்தப்பட வேண்டும்.யார் பெயர், இந்த நுாலகத்துக்கு இடப்பட்டதோ, அந்த அண்ணாதுரை பிறந்த தினமான, செப்., 15ம் தேதி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Sunday, August 9, 2015

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?


வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிவைத்து, தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு எடுத்துச் செல்கிறீர்களா? வயல்-தோட்டங்களுக்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைக் கையாளுபவரா? வீடுகளில் தொட்டதற்கெல்லாம் கிருமிநாசினியால் சுத்தம் செய்பவரா? அப்படியானால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உங்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதை ஒருவர், இருவர் அல்ல, 28 நாடுகளைச் சேர்ந்த 174 விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை
உடலை உருக்குலைத்து உயிருக்கு உலை வைக்கும் புற்றுநோய், பலருக்கும் மரணத்தையும் வரவழைத்துவிடுகிறது. இன்றைக்குச் சர்வசாதாரணமாக மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் எப்படி வருகிறது? சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப் பழக்கம், புகையிலை பயன்பாடு மூலம் வருகிறது என்றுதான் உடனடியாகப் பதில் வரும்.
இவை மட்டும்தான் காரணமா? இல்லவே இல்லை. வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.
புதிய காரணிகள்
என்னென்ன பொருட்கள் அப்படிப் புற்று நோயை உண்டாக்குகின்றன? அவை பல்வேறு வடிவங்களில் மருந்துகளாக, ரசாயனங்களாக, பிளாஸ்டிக்குகளாக, பூச்சிக்கொல்லிகளாக, கிருமி நாசினிகளாக நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த கருதுகோளை மையமாக வைத்துத்தான் மருத்துவ விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
பூச்சிக்கொல்லிகளில் இருந்து பிளாஸ்டிக் சேர்ப்பான்கள் வரையிலான பொருட்கள் புற்றுநோய்க்கு எப்படிக் காரணமாகின்றன என்பது தொடர்பான இந்த ஆய்வில், இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆய்வு, நம்முடைய வீட்டைச் சுற்றிப் புற்றுநோய் காரணிகள் எப்படி உள்ளன என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறது.
நம்மைச் சுற்றி
விஞ்ஞானிகள் 85 ரசாயனங்களை ஆய்வு செய்ததில் 11 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 50 ரசாயனங்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்கள் குறைந்தளவு இருப்பதாகவும், 13 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தொடக்க நிலை காரணிகளைப் பெற்றிருப்பதாகவும், எஞ்சிய 22 ரசாயனங்களில் மட்டும் புற்றுநோயை உண்டாக்கும் வீரியம் இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சரி, எந்த ரசாயனங்கள், சேர்ப்பான்கள் மூலம் புற்றுநோய் வருகிறது?
பூச்சிக்கொல்லிகள், காளான் கொல்லிகள், பிளாஸ்டிக்குகளில் கலக்கப்படும் சேர்ப்பான்கள், பி.வி.சி., பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் உணவு டப்பாக்கள் செய்யப் பயன்படும் பாலி கார்பனேட் பொருட்கள், கிருமிநாசினிகள், ஒப்பனை பொருட்கள் செய்யப் பயன்படும் ரசாயனங்கள், வலி நிவாரண மருந்துகள் செய்யப் பயன்படும் அசிட்டமினாஃபென் மற்றும் பீனோபார்பிட்டால் பொருட்கள், கட்டுமானம் மற்றும் பெயிண்ட்களில் உள்ள தீப்பிடிக்கும் பண்பு கொண்ட பொருட்கள், கறையை நீக்க உதவும் ரசாயனம் போன்ற அனைத்துமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வல்லமை படைத்தவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புதிய கண்டுபிடிப்பு
அதேநேரம், மேற்சொன்ன பொருட்கள் எல்லாமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் என ஆணித்தரமாகச் சொல்ல முடியாது என்கிறார் லண்டன் புருனல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஹெமாத் யசாய் விளக்கமும் அளித்துள்ளார். புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆரம்பக் கட்டக் காரணிகள், இந்தப் பொருட்களில் இருப்பது பற்றி நிரூபிப்பதற்குக் கூடுதல் ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது இன்னொன்றைக் கண்டுபிடித்தது குறித்து விஞ்ஞானிகள் வியப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதாவது பிளாஸ்டிக் சேர்ப்பான்களில் உள்ள ரசாயனங்கள், சோப்புகள், பற்பசைகள், சுத்தம் செய்ய உதவும் கிருமிநாசினிகளில் சேர்க்கப்படும் ரசாயனக் கலவை போன்றவை மனித உடல்நலனில் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சேர்மானங்களைக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சந்தேகம் எழலாம். இதுபற்றி அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலி மற்றும் சார்பியல் சிறப்பு மருத்துவர் அசார் ஹுசேனிடம் கேட்டோம்.
நம்மைச் சுற்றி
“சுற்றுச்சூழலில் உள்ள புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் (கார்சினோஜென்) புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம். ஆஸ்பெஸ்டாஸ், கார்பன், கரி பொருட்கள், புகை ஆகியவற்றுக்குக் கார்சினோஜென் தன்மை உண்டு. இன்றைக்குச் செயற்கை தயாரிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெருகிவிட்டது.
உணவு வகைகள் பார்ப்பதற்கு ஆசையைத் தூண்ட வைக்க வேண்டும் என்பதற்காக வண்ணக் கலவைகள் சேர்க்கப்படுகின்றன. மேலும், ருசியைக் கூட்டும் கலவையும் சேர்க்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படங்கள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் புற்றுநோய் வரக்கூடும் என்றும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக் வேண்டாம்
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக் கலன்களில் தண்ணீர், உணவை எடுத்துச் செல்கிறார்கள். பிளாஸ்டிக்குக்குத் தரக் கட்டுப்பாடு இருக்கிறது. அதன்படிதான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதா என்பது சந்தேகம்தான். நாம் வாங்கும்போதும், தரக் கட்டுப்பாட்டைப் பரிசோதித்து வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வெயிலில் வைத்துப் பயன்படுத்துவதும், தொடர்ந்து அதைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பதும் கூடாது.
பிளாஸ்டிக் வினை புரியும் தன்மை கொண்டது. தண்ணீருடனோ, சாப்பாட்டுடனோ வினைபுரிந்து, அதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது. ரசாயனப் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்வதும் ஆரோக்கியத்தைக் காக்கும்" என்கிறார் அசார் ஹுசேன்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு காலத்தில் புற்றுநோய் தாக்கியவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. வயதானவர்களைத் தாக்கும் நோயாகவே, அது கருதப்பட்டது. இன்றோ அந்த நிலை இல்லை. ஏழை, பணக்காரர், சிறார், பெரியவர்கள் என வேறுபாடு இல்லாமல் பரவலாக மக்களைத் தாக்கும் நோயாக மாறிவிட்டது.
அடுத்த 20 ஆண்டுகளில், புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் முடிச்சு போட்டுப் பார்க்கும்போது, நம் வீட்டைச் சுற்றியே புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை நாம் வளர்க்கிறோமோ என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. இந்தக் காரணிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. 

date 10 8 15 

இன்ஜி., கல்லூரியில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு:11 ஆயிரம் கல்வி நிலையங்களில் அமலாகிறது

இன்ஜி., கல்லூரியில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு:11 ஆயிரம் கல்வி நிலையங்களில் அமலாகிறது

புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை அளித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வியை பலப்படுத்தவும், அதன் கட்டமைப்பை மாற்றி அமைக்கவும் தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, கடந்த, காங்., ஆட்சியின் போது ஒரு குழு அமைக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல்:

அப்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த கபில் சிபல், இந்த குழுவை அமைத்தார். மத்திய அரசின் கல்வித்துறை முன்னாள் செயலர் எம்.எம்.காவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.இதுகுறித்து விவரங்கள், மத்திய அரசின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும், 11 ஆயிரத்துக்கும் அதிகமான இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் சேருவதற்கு, மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர் சேர்க்கையில், பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கு, ஜே.இ.இ., எனப்படும் தேர்வும்; மேலாண்மை படிப்புகளுக்கு, சி.எம்.ஏ.டி., என்ற தேர்வும் நடத்தப்படுகிறது.இந்த நடைமுறை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

சில மாநிலங்களில், இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் தனியாக நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. ஒருசில மாநிலங்களில், கவுன்சிலிங் முறை மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகள், தங்களுக்கென தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இது, மாணவர் சேர்க்கையை சிக்கலாக்குகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சில வழிமுறைகள் உள்ளன.
ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நாடு முழுவதும் ஒரே தேர்வாக, பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம்.தேசிய தேர்வு பணிகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் கட்டுப்பாட்டின் கீழ் இந்த தேர்வை நடத்தலாம்; இது, சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். தேவையானால், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற அமைப்புகளின் உதவியை நாடலாம்.
மாற்ற வேண்டும்:

தேசிய தேர்வு பணிகள் அமைப்பை, சம்பந்தப்பட்ட கல்வி தொடர்பான உயர்ந்த அமைப்பாக மாற்ற வேண்டும். தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தவும், அது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்தலாம். இதுபோல், மேலாண்மை படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். மாணவர் சேர்க்கைக்கான, 'கவுன்சிலிங்' முடிந்த பின், மீதமிருக்கும் சீட்டுகளை, 'மேனேஜ்மென்ட் கோட்டா' என, அறிவிக்க கூடாது. அந்த சீட்டுகளை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
செயல்படும் 9 குழுக்கள்:

*தொழில்நுட்ப கல்வி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, 1945ல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அமைக்கப்பட்டது.
*இன்ஜினியரிங், தொழில்நுட்பம், மருந்தியல், கட்டுமானம் மற்றும் நகரமைப்பு, விடுதி மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், மேலாண்மை கல்வி, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்ற பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு உண்டு.
*தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்படும், ஏ.ஐ.சி.டி.இ., தொழில்நுட்ப கல்வி தொடர்பாக திட்டமிடுதல், கட்டுப்பாடுகளை உருவாக்குதல், தர வரிசை வழங்குதல், கண்காணிப்பு, நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
*ஏ.ஐ.சி.டி.இ., தலைவரின் கீழ், பேராசிரியர் வளர்ச்சி, இளநிலை கல்வி, முதுநிலைக் கல்வி, ஆராய்ச்சி, தர உறுதி, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்தல், ஆய்வு மற்றும் நிறுவன வளர்ச்சி, நிர்வாகம், நிதி என, ஒன்பது குழுக்கள் செயல்படுகின்றன.
*இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுவதை தவிர்க்க, மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்த பரிந்துரைகளை அளிப்பதற்காகவே குழு அமைக்கப்பட்டது.
*இந்த குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள, பொது நுழைவுத் தேர்வுக்கும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ.,க்கும் எந்த தொடர்பும் இல்லை.

 

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? 

டாக்டர் கு. கணேசன்
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.thanks tamil.thehindu paper
தொடர்புக்கு: gganesan95@gmail.com